முதல்வர் கலைஞர் நேர்காணல்; சென்னை சட்டக்கல்லூரி விவகாரத்தில் ஜெய லலிதா வைகோவும் தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள்

இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டுமென்பதே
எங்களுடைய கருத்து அது ஏற்படாத வரையில் மனநிறைவில்லை

முதல்வர் கலைஞர் நேர்காணல்

கோவை, நவ. 17- பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் கலைஞர் நேற்று காலை கோவைக்கு வருகை தந்தார். பின்பு செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, மதவெறி ஒழிக்கப்பட வேண்டும் - மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் கொள்கை - கோட்பாடு - இலட்சியம் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து கூறும்போது, இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதே எங்களுடைய தீர்மானங்களின் பொழிப்புரை - மூலக் கரு -மய்யக் கருத்து! அது ஏற்படாத வரையில் எங்களுக்கு மனநிறைவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்: இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் ராஜபக்சேயை நம்பக்கூடாது என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் நேற்றைக்குக் கூட ஏதிலிகள் வந்ததாகச் செய்திகள் வந்திருக்கிறதே?

கலைஞர்: ராஜபக்சேயை நம்பக்கூடாது என்று தீர்மானம் போடவில்லை. தீர்மானத்தின் மீது பேசும்போது, அவர் தமிழர்களுக் காகப் பரிந்து பேசுவதாகவும், தீவிரவாதிகளைத்தான் விழ்த்துவதில் அக்கறையாக இருக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவருடைய செயல்களைப் பார்க்கும்போது, அவருடைய கூற்றை நம்புவதற்கில்லை, நம்பமுடியாது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

செய்தியாளர்:சென்னை சட்டக்கல்லூரி விவகாரத்தில் ஜெய லலிதா உங்களைக் குற்றஞ்சாட்டி, தார்மீகப் பொறுப்பேற்று நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டுமென்று சொல்கிறாரே? அவரைப் போலவே வைகோவும் அதே கருத்தைச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர்: இதிலேயிருந்து என்ன தெரிகிறது என்றால், என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வதற்காக மாணவர்களின் இரு சாராரையும் இவர்களே தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. (சிரிப்பு)

செய்தியாளர்: சட்டசபை தீர்மானத்திற்குப் பிறகு தொடர் நடவடிக்கைகள் உங்களுக்குத் திருப்திகரமாக உள்ளதா?

கலைஞர்: போர் நிறுத்தம் வேண்டும் என்பது எங்களுடைய எல்லா தீர்மானங்களின் பொழிப்புரையாகும். அதுதான் மூலக்கரு, மய்யக் கருத்து. அது ஏற்படாத வரையில் எங்களுக்கு எப்படி திருப்தி ஏற்பட முடியும்

செய்தியாளர்: எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அஞ்சுவது யாதொன்றுமில்லை என்று சொன்னார். ஆனால் சமீப காலமாக எனக்கு பாதுகாப்பு தரப்படவில்லை. பசும் பொன் கிராமத்தில் என்னைத் தாக்க முயற்சி நடை பெற்றது, என் பாதுகாப்புக்காகத் தனியாக சட்டம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்கிறாரே?

கலைஞர்: இதைப் பற்றி நான் விவரமாகவே கூறுகிறேன். செல்வி ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருப்பதையொட்டியும், சமீபத்தில் அவருக்கு மிரட்டல் கடிதம் வந்ததைக் கருத்தில் கொண்டும், அவர் பசும்பொன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோது, அவருக்கு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு - இவற்றுடன் கூடுதலாக - தனியாக 174 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு அலுவலில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இது தவிர, பசும்பொன் நினைவிடத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஆயிரம் பேர் தனியாக ஈடுபட்டிருந்தனர். தமிழகக் காவல் துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததன் காரணமாக, பசும்பொன் நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாக நடைபெற்று முடிந்தன. ஜெயலலிதா மீது தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அவரது ஆதரவாளர்கள்தான் காவல் துறையினர் மீது நடத்திய சிறு கல் வீச்சு சம்பவத்தைத் தவிர வேறு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பின்படி மெய்க்காவல் பணியில் 3 மணி சுழற்சி முறையில், அவரால் தேர்ந்து எடுக்கப்பட்ட மூன்று காவல் ஆய்வாளர்கள், கூடுதல் மெய்க்காவல் பணியில் மூன்று தலைமைக் காவலர்கள், அவரது இல்லப் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்திய இரண்டு தலைமைக் காவலர்கள் உள்பட 12 காவலர்களும், வழிக்காவல் பாதுகாப்பிற்காக இரண்டு வாகனங்களில் தலா இரண்டு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் வீதம் மொத்தம் ஆறு ஆய்வாளர்கள் மற்றும் 18 காவலர்கள் பணியில் இருந்து வருகிறார்க.ள

மேலும் இல்லத்தின் பிரதான நுழைவு வாயிலில் சோதனையிடுதல் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஒரு காவலர் மற்றும் ஒரு பெண் காவலர் சுழற்சி முறையில் ஆறு பேர் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றி, பாதுகாப் பிற்காக 3 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 7 காவலர்கள் பணியில் இருந்து வருகிறார்கள். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் மூன்று உதவி ஆய்வாளர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும் ஜெயலலிதாவிற்கு குண்டு துளைக்காத கார் ஒன்று வழங்கப்பட்டு, அதற்கு ஓட்டுநர்களாக இரண்டு காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். இது தவிர தேசிய பாதுகாப்புப் படையினர் இரண்டு கார்களில் பணி சுழற்சி முறையில் மொத்தம் 12 காவலர்கள் பணியிலே உள்ளனர். மேற்கண்ட அனைத்துப் பாது காப்புகளையும் மேற்பார்வையிட சுழற்சி முறையில், அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு காவல் துணைக் கண்காணிப் பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். ஒட்டு மொத்தமாக ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் இரண்டு காவல் துணைக் கண்காணிப்பார்கள், 3 ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 84 காவலர்கள் பணியிலே இருந்து வருகிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைப்படி இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவினருக்கு அளிக்கப் படவேண்டிய பாதுகாப்பு அலுவலர்களின் மொத்த எண்ணிக்கை 54. ஆனால் ஜெயலலிதாவுக்கு தமிழக அரசு கூடுதலாக 30 பேர் சேர்ந்து, மொத்தம் 84 காவலர்கள் பாதுகாப்புப் பணியிலே ஈடுபட்டுள்ளார்கள்.

ஆனால் கடந்த 2001-2006 ஆம் ஆண்டுகளில் தற்போதைய முதல் அமைச்சரான எனக்கு, விடுதலைப் புலிகளின் அமைப்பு, தமிழ்நாடு விடுதலைப் படை மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிட மிருந்து நேரடி அச்சுறுத்துல்கள் இருந்த போதிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வரையறுத்திருந்த 54 காவலர்களுக்கு மாறாக 43 காவலர்கள் மட்டுமே பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது கோபால்சாமியினால் (வைகோ) என்னுடைய உயிருக்கு ஆபத்து வரும் என்று ஒரு கடிதத்தை மத்தியப் புலனாய்வுத் துறை (அய்.பி.) அனுப்பியது - நான் எதிர்க்கட்சியிலே இருந்த போது ஒரு கடிதம் எழுதப்பட்டு, அதை வைத்துப் பாதுகாப்புக் கொடுத் தார்கள் அல்லவா. அப்போது 54 பேருக்கு பதிலாக 43 பேர்தான் கொடுத்திருந்தார்கள். ஆனால் இப்போது 54 பேருக்கு பதிலாக 84 பேர் கொடுக்கப்பட்டுள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை