இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி இந்தியாவில் இந்து மதப் போர்வையில் தீவிரவாதிகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.

நாடெல்லாம் பரவ வேண்டும்; வீடெல்லாம் பேசவேண்டும்; ஏடெல்லாம் எழுதவேண்டும்

வன்முறை - வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச்
சக்தியோடு யார் கூட்டு சேர்ந்தாலும் அவர்களை அடையாளங்கண்டு

அரசியலில் காணாமல் போகச் செய்வோம்!

சென்னை கூட்டத்தில் தமிழர் தலைவர் அறைகூவல்

- வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரம் கொண்ட மதவெறிச் கும்பலோடு எந்த அரசியல் கட்சி கூட்டு சேர்ந்தாலும் அவைகளை மக்களுக்கு அடையாளம் காட்டி புறந்தள்ளுவோம். அவர்கள் அரசியலில் காணாமல் போவர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சங் பரிவார்க் கும்பலும் - வெடிகுண்டு கலாச்சாரமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் - நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் 20.11.2008 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி வரவேற்று உரையாற்றினார். அவரது உரையில்,

ஏ.பி.வி.பி. என்ற பெயரில் இந்தக் கும்பல் முதல் முறையாக ஊடுருவியது. 1980 ஆம் ஆண்டுகளிலே திராவிடர் கழகத்தினு டைய ஊர்வலங்களிலே ஆர்.எஸ்.எஸ். என்ற போர்வையிலே ஆரியப் பாம்பின் நடமாட்டம் என்று அன்றைக்கே முழங்கியது திராவிடர் கழகம் என்றார்.

பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு

அடுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கழகப் பொதுச் செயலாளர் சு. அறிவுக்கரசு தனது உரையில், காலம் கருதி எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், எந்த ஒரு பொருள்பற்றியும் மக்கள் மத்தியிலே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஓர் இடம் என்றைக்கும் பெரியார் திடல்தான். நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்தான் தலைமை ஏற்று மக்களுக்கு விளக்கிச் சொல்வார்கள்.

அந்த மதவெறிச் சக்தியை அன்றைய காலகட்டத்திலிருந்து அதன் ஆபத்தை உணர்ந்து மூர்த்தண்ணியமாகத் தாக்கியவர் தந்தை பெரியார். அதே வழியில், நம்முடைய தமிழர் தலைவர் வீரியத்தின் முனை முறியாமல் மதவெறி அபாயத்தை நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது சிறப்புரையில் ஆற்றிய உரை வருமாறு:-

மாநில அரசைத் தட்டிக் கேட்க...

ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா கூட்டங்களின் பயங்கரவாதச் செயல்கள் நாட்டு மக்களுக்குப் புரியாத நிலையில் இருக்கின்றது. இந்துமத வெறிச் சக்திகளின் ஆபத்தை மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும். மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். மதவெறி தலைவிரித்தாடும் மாநிலங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்து - தடுக்கவேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தராத மாநில அரசை மத்திய அரசு தட்டிக் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் இன்றைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மனுதர்மம், வர்ணாசிரம தர்மம்தான். இதன்மூலம் வர்ணாசிரம தர்மத்திலிருந்து விலக்கிப் பார்த்தால் இந்து மதம் என்பது பூஜ்யமே.

அம்பேத்கர் சொன்னாரே!

அண்ணல் அம்பேத்கர் சொன்னார், மனிதன் ஜாதியோடு பிறக்கின்றான். ஜாதியோடு வாழுகின்றான். ஜாதியோடு மறை கின்றான். அவன் மறைந்த பிறகு சுடுகாட்டில் அடக்கம் செய்யச் சென்றால், அங்கேயும் ஜாதிதான் வரவேற்கிறது. இதுதான் இந்து மதம். இதுதான் பார்ப்பன மதத்தினுடைய நிலை.

தர்மம் அழியும்பொழுது ஆயுதம் எடுத்து - தண்டம் எடுத்துப் போராடலாம் என்று ஆயுதக் கலாச்சாரத்தை - வன்முறைக் கலாச்சாரத்தை இந்த நாட்டிலே விதைத்தது பார்ப்பன மதமான இந்து மதம்தான்.

கீதையின் மறுபக்கத்திற்கு இதுவரை மறுப்பில்லை

பகவத் கீதையிலே கண்ணன் சொன்னான் என்று சொல்கின் றார்கள். பகவத் கீதையை எதிர்த்து நாம் எழுதிய கீதையின் மறு பக்கம் நூலுக்கு இன்றுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ மான மறுப்பும் வரவில்லை.

கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கீதைபற்றி ரஜினி கருத்து பாராட்டத்தக்கது

ஆனால், கடமையை செய்; பலனை எதிர்பார் என்று ரஜினிகாந்த் சொல்லி கீதையில் சொல்லப்பட்டிருப்பது தவறு என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர் பெரியார் திரைப் படத்தைப் பார்த்து அப்படி சொன்னாரா? அல்லது அவர் சொந்த சிந்தனையால் அப்படிச் சொன்னாரா? என்பதைப் பார்க்கும்பொழுது, அவருடைய கருத்து வரவேற்கத்தக்கது. அவரைப் பாராட்டுகிறோம்.

அவர் சொன்ன இந்தக் கருத்து நாட்டுக்கும் நல்லது. கலைத்துறைக்கும் நல்லது.

குறுந்தகடு மூலம் பரப்பவேண்டும்

இதுபோன்ற செய்திகளை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இங்கே நாங்கள் ஆற்றுகின்ற உரை குறுந்தகடு மூலம் மக்களிடையே பரப்பி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

சிறுபான்மையினர் இருவகையாக உள்ளனர். ஒருவகையினர் ஆதிக்கம் செலுத்தும் சிறுபான்மையினர்- பார்ப்பனர்கள். இன் னொரு வகையினரோ - ஆதிக்கம் செலுத்த இயலாத சிறுபான் மையினரான கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக் கின்றவர்கள்.

ஒரிசாவில் - விசுவ இந்து பரிசத் மாநாடு

ஒரிசா மாநிலத்தில் விசுவ இந்து பரிசத் மாநாடு நடத்துகிறது என்றவுடன், மத்திய அரசு அங்கு கொந்தளிக்கும் சூழ்நிலை இருக்கிறது. மாநாடு நடத்த அனுமதி தரக்கூடாது என்று சொல்கிறது. ஒரிசாவில் பி.ஜே.பி. ஆதரவோடு அங்குள்ள பட்நாய்க் அரசாங்கம் அனுமதி தருகிறது.

மதம் என்ற பெயராலே இன்றைக்கு மனித நேயம் அழிக்கப்படுகின்றது.

மனித பக்தி முக்கியமா? தேச பக்தி முக்கியமா?

இந்தியாவில் தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய வந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் என்ற ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பாதிரியாரையும், அவரது இரண்டு பிள்ளைகளையும் கிராமத் தில் - தொழு நோயாளிகளுக்குத் தொண்டு செய்துவிட்டு ஜீப்பில் தூங்கும்பொழுது உயிரோடு எரித்துக் கொன்ற கொலைகார வன்முறைக் கூட்டம்தான் - பஜ்ரங் தள் என்ற மதவெறிக் கூட்டம். மனித பக்தி முக்கியமா? உன்னுடைய தேச பக்தி முக்கியமா?

விருத்தாசலத்தைச் சார்ந்த கன்னியாஸ்திரி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய கூட்டம்தான் இந்த மதவெறிக்கூட்டம்.

மோடியை நல்லவர் என்று சொல்கின்றவர்கள் குஜராத்தில் மோடி அரசுதான் ஆர்.எஸ்.எஸிற்கு பொற்காலம். மோடியை நல்ல மனிதர் என்று இங்கு சொல்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்றால், இவர்கள் எல்லாம் யார் என்பதை அடையாளம் காணவேண்டும்.

லாலு பிரசாத் அவர்கள் மத்திய அரசிலே அமைச்சராக இல்லை என்றால், கோத்ரா ரயில் சம்பவத்தின் பின்னணியே வெளியே வந்திருக்காது. அவ்வளவும் மூடி மறைக்கப்பட்டி ருக்கும்.

இந்துக்களை இராணுவ மயமாக்கு

இந்துக்களை இராணுவ மயமாக்கு - இராணுவத்தை இந்து மயமாக்கு என்பதுதான் இந்து மதத்தவர்களின் வெறித்தனம். இதுதான் வாஜ்பேயி, அத்வானிகளின் தத்துவம்.

இங்குள்ள முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் இந்த மதவெறிக் கூட்டத்தோடு கூட்டணிக்கு முயற்சிக்கும், நண்பர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட மதவெறி சக்திகளுடன் நீங்கள் கூட்டுச் சேர்ந்தால் தெரிந்தோ - தெரியாமலோ ஒன்று மறைமுகமாக உதவி செய்கிறீர்கள் என்று பொருள். அல்லது நேரடியாக உதவி செய்கிறீர்கள் என்று பொருள். உங்களை நாங்கள் புறந்தள்ளு வோம். உங்களை நாங்கள் அடையாளம் காட்டுவோம்.

பார்ப்பனர் வெடிகுண்டு கலாச்சாரத்தில் ஈடுபட்டால்...

அப்துல் காதர் பெயரோ, இப்ராகிம் பெயரோ வெடிகுண்டு பிரச்சினையில் பெயர் வந்ததென்றால், அவர்களைப்பற்றிக் கொட்டை எழுத்துக்களில் போட்டு அடையாளம் காட்டுவார் கள். அதேநேரத்தில், சிறீகாந்த் பிரசாத் என்ற புரோகித பார்ப்பனர் வெடிகுண்டு வன்முறைக் கலாச்சாரத்தை நடத்தினார் என்றால், அதை அப்படியே பத்திரிகைகளில் மூடி மறைத்துவிடுவார்கள்.

இந்து மிலிட்டரி ஸ்கூலா?

இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி இந்தியாவில் இந்து மதப் போர்வையில் தீவிரவாதிகளைத் தயாரித்து அனுப்புகிறார்கள்.

அதேபோல, முஸ்லிம் மிலிட்டரி ஸ்கூலை இந்த நாட்டிலே நடத்த நீங்கள் அனுமதிப்பீர்களா?

உள்நாட்டு யுத்தம் வருமாம்!

பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங் சொல்கின்றார்:

இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மீது இந்துத்துவா தொடர்பு டையவர்களைச் சார்ந்தவர்களை புலன் விசாரணை என்ற பெயரில் மத்திய அரசு விசாரிக்க ஆரம்பித்தால், இந்தியாவிலே உள்நாட்டு யுத்தம் வரும் என்று சொல்கிறார் என்று சொன்னால், மத்திய அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

எனவே, இந்து மதவெறித்தனத்தை வன்முறை வெடிகுண்டு கலாச்சாரத்தை இந்த நாட்டிலே தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகின்ற ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார், பி.ஜே.பி., கூட்டத்தை அமைதிப் பூங்காவான தமிழகத்திலே அனுமதிக்கலாமா? இனியும் இந்த நாட்டிலே அனுமதிக்கலாமா?

மதவெறிச் சக்திகளோடு
கூட்டு சேர்ந்தால் காணாமல் போவீர்!

எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, அது முற்போக்குக் கட்சிகளாக இருந்தாலும் அல்லது வேறு கட்சிகளாக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியும் இந்த மதவெறி, தீவிரவாத வன்முறைக் கட்சிகளோடு சேர அனுமதிக்கமாட்டோம்.

மதவெறி சக்திகளோடு அரசியல் கூட்டணி சேருகிறவர்களை நாட்டு மக்களுக்கு அவர்களை அடையாளம் காட்டி அவர்களை அரசியலில் அடையாளம் தெரியாத அளவுக்கு காட்டுவோம்; காட்டுவோம் என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி மேலும் விளக்கமளித்தும் பேசினார். (முழு உரை பின்னர்).

தமிழர் தலைவர் அவர்களுடைய உரையைக் கேட்க ஏராளமான மக்கள் - புது முகங்கள் வந்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை