பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி :

தமிழர் தலைவர் தலைமையில் தனித்தன்மையோடு
மருந்தியல் துறையில் மகத்தான சாதனை!

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் கீழ் இயங்கும், பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியானது சமூக சீர்திருத்த சிற்பி பெரியார் அவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையே மூச்சாகக் கருதும் நிறுவனர் தமிழர் தலைவர் டாக்டர்.கி.வீரமணி அய்யா அவர்களின் வழி காட்டுதலின் பேரில், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெண்களுக்காக இந்நாட்டில் முதன் முறையாகத் தொடங்கப்பட்ட இம் மருந்தியல் கல்லூரி தொடர்ந்து 25 ஆண்டுகள் சாதனை புரிந்து இன்று வெள்ளி விழா கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

இயற்கை எழில் நிறைந்த சூழலில் 7 ஏக்கர் நிலப்பரப்பில் திருச்சிராப்பள்ளியின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கல்லூரி, மருந்தியல் பட்டயப் படிப்பை (d.pharm) மட்டுமே கொண்டு துவக்கப்பட்டது. குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்து இளநிலை மருந்தியல் (b.pharm),, முதுநிலை மருந்தியல் (m.pharm), படிப்பு களை இந்திய மருந்தியல் குழுமம் (pci) மற்றும் அகில இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் குழுமம் (aicte), புதுதில்லி ஆகியவற்றின் அங்கீகாரத்துடன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் இணைந்து செவ்வனே நடத்தி வருகின் றது. முனைவர் தகுதி பெறுவதற்கான ஆராய்ச்சி மையமாகவும், (reserch centre) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில்nba (national Board of Accreditaion) தேசிய மதிப்புறு அங்கீகாரம் iso 9001 : 2000 உலகத் தரச்சான்றிதழ்களைப் பெற்றும், இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்தின் (iste) உறுப்பினராகவும் செயல்பட்டு வருகின்றது.

மாணவர்களுக்குத் தரமான கல்வி, அறிவொளி புகட்டுதல் மட்டுமல்லாது, கல்லூரியின் அரும்பெரும் செயல்களுக்கு உறுதுணையாகச் செயல்படும் அர்ப்பணிப்பு எண்ணம் கொண்ட சிறந்த, அனுபவமிக்க பேராசிரியர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பெரும்பாலான பேராசிரியர்கள் பல்வேறு சிறந்த பல்கலைக் கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும், மேலும் சிலர் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்ந்து கொண்டும் உள்ளனர். புதிய தொழில் நுட்ப முறை மற்றும் மருந்தியல் துறையின் முன்னேற்றச் செயல்பாடுகள் பற்றிய கருத்துகள் மாதம் ஒருமுறை பேராசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் (journal Club) விவாதிக்கப்படுகின்றன.

இக்கல்லூரி தனது 25 ஆண்டு கால வரலாற்றில் வியத்தகு சாதனைகளைக் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் படைத்துள் ளது. இதனை நினைவு கூரும் வகையில் இந்த வெள்ளி விழாவா னது தேசிய மருந்தியல் வாரத்தில் கொண்டாடப்படு வதில் பெரு மிதம் கொள்கிறோம். இந்நாள் வரை 3076 சிறந்த மருந்தாளுநர் களை இக்கல்லூரி உருவாக்கியுள்ளது. கல்லூரியின் தனிச்சிறப்பு களில் ஒன்றாக விளங்கும் புதிய அடுக்குமாடிக் கட்டடத்திற்கு, 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாற்றப்பட்டது. புதிய கட்டடமானது தமிழ்நாடு ஓய்வு பெற்ற முன்னாள் முதன்மைச் செயலாளர் கு.சொக்கலிங்கம், அய்.ஏ.எஸ் அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் க. ஆனந்த கண்ணன் திறந்து வைத்தார்.

மருந்தியல் துறைக்குத் தேவையான அனைத்து நவீன கருவிகள் உள்ளிட்ட ஆய்வகக் கூடங்கள், வகுப்பறைகள் கொண்ட நுட்பமான அமைப்பு உடையது எமது கல்லூரி. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பிரமிப்பான கட்டட அமைப்புடன் கூடிய கலைஞர் கருணாநிதி நூலகமானது, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு அமைதியான சூழலில் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் பல இலட்சம் மதிப்பிலான உள்நாட்டு, வெளிநாட்டு ஆராய்ச்சி இதழ்களும், மருந்தியல் துறை அல்லாது பொது அறிவு, பெரியார் சிந்தனைகள் அடங்கிய பல புத்தகங்களும் உள்ளன. மாணவர்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள தேவையான நூல்கள், இதழ்களும் உள்ளன.

மேலும் அனைத்து வசதிகளும் கொண்ட இணைய தளத்துடன் கூடிய கல்வி நுட்பவியல் மையம் (educational technology centre), இலக்க நூலகம் (digital library) ஆகியவை உள்ளன. மருந்தாக்க வியல் (pharmaceutics), மருந்தாக்க வேதியியல் (pharmaceutical Chemistry), மூலிகை மருத்துவத்துறை (Pharmacognosy), மருந்தியல் (pharmacology), மருந்தியல் முறைப்பணி (pharmacy practice), ஆய்வக நுட்பனர் துறை (Medical laboratory Technology) ஆகிய 6 வகையான துறைகளும் உலகத் தரத்திற்கு இணையாக விளங் கும் வகையில் செவ்வனே செயல்படுகின்றன. மருந்தாக்கவியல் துறை நானோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிகளையும், மருந்தாக்க வேதியியல் துறையானது அதிநவீன மருந்துகள் தயாரிப்பு முறை பற்றிய ஆராய்ச்சிகளையும், மூலிகை மருத்துவத் துறையானது மூலிகைச் செடிகள் பற்றிய ஆராய்ச்சிகளையும், மருந்தியல் துறையானது மருந்துகளுக் கிடையே ஏற்படும் இடர்ப்பாடுகள் (drug interactions) குறித்த விலங்கின ஆராய்ச்சிகளும், மருந்தியல் முறைப்பணி துறையானது மருந்துகளைச் சரியான முறையில் கையாளுதல் மற்றும் மருத்துவமனைகளில் மருந்தாளுநர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மேலும் வளர்ச்சி அடைவதற்குத் தேவையான முயற்சிகளையும், ஆய்வக நுட்பனர் துறையானது மருத்துவமனையில் ஆய்வக நுட்பனர்களின் செயல்களை விரிவுபடுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றது.

கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை மற்றும் முறையாகப் பதிவு செய்யப்பட்ட, சமூக நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிராணிகள் பராமரிப்புக் கூடமும் நிறுவப்பட்டுள்ளது. எமது கல்லூரியானது தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் (emd Cell) மற்றும் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (mous) மூலமாக இக்கல்லூரி மாணவ, மாணவியர் களுக்குத் தொழிற்சாலைகளில் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், தொழிற்சாலைகளைப் பார்வையிடுதல், வல்லுநர் கருத்துரைகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங் கங்கள் போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தங்கள் மூலம் உயர்தரச் சிறப்பு மருத்துவமனைகள், தேசியப் பல்கலைக் கழகங்கள், மருந்து தொழிற்சாலைகள், சர்வதேச பல்கலைக் கழகங்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டிற் கான (Research & Development Cell) மூலம் எமது பேராசிரியர்கள் பிற கல்லூரி மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அது சம்பந்தமான 250 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் உள், வெளி நாடுகளில் இருந்து வெளிவரும் தரமான மருத்துவ ஆராய்ச்சி இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

எமது கல்லூரி திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்று விளங்கும் சிறந்த மருத்துவமனையான ஸீ ஹார்ஸில் மருத்துவ தகவல் மையம் ஆரம்பிக்கப்பட்டு, மருந்துகள் மற்றும் அவற்றின் பின்விளைவுகள் பற்றிய விவரங்களையும், ஆலோசனைகளையும் நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றது.

பெரியார் மருந்து தகவல் மைய செய்தித்தாள் (pdic News letter) மற்றும் பெரியார் மருந்தாக்கவியல் அறிக்கை (Periyar Pharma bulletin) என்ற இரண்டு கல்லூரி வளாக வெளியீடு கள், இக்கல்லூரியின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் வெளியிடப்பட்டு வருகின்றன. எமது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்வி மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

முதுநிலை மருந்தாக்கவியல் இரண்டாமாண்டு மாணவர் ச.இளங்கோ, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் மார்ச் 2006 ஆம் ஆண்டிற்கான தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவி செ.சரஸ் வதிக்கு மாநில அளவில் 2006 - -2007 ஆம் ஆண்டிற்கான சேவ ரத்னா டாக்டர் ஆர்.வெங்கடேசலு தங்கப்பத்தகம் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில், மேதகு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தங்கப்பதக்கமும், சிறப்பு சான்றிதழும் வழங்கினார்.

இளநிலை மருந்தியல் நான்காமாண்டு மாணவர் அ.தமிழ்ச் செல்வன், 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் விருதினை இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகத்திடமிருந்து பெற்றார் என்பது பெருமைக்குரியது.

மேலும் தனிச்சிறப்பாற்றல், தனிச்சிறப்புடன் செயல்படும் மாணவர்களுக்கு, அறக்கட்டளை விருதுகளான ஞான செபாஸ்டியன் தெரசா கல்வி தொண்டு நிறுவன விருது, வசுமதி அம்மாள் பாரதி விருது மற்றும் தர்மராஜன் நினைவு விருதுகள் எனப் பல விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.

மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன், பேராசிரியர்களின் உதவியுடன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுதல், இந்திய அளவிலான கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் குவிக்கின்றனர்.

மேற்கூற்றினை மெய்யாக்கும் வண்ணம் எமது கல்லூரியின் முன்னாள் மாணவச் செல்வங்கள், பயின்று சென்ற மாணவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சிறந்து விளங்கும் பல்வேறு பல்கலைக் கழகங்கள், அரசு மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை, மருத்துவ ஆராய்ச்சி மையம், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், கிராம சுகாதார மையங்களில் பணியில் அமர்ந்து, வெற்றிகரமாக வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளனர். மேலும் சிலர் தொழில் முனைவோராகவும் சிறந்து விளங்குகின்றனர்.

பயிற்சி மற்றும் பணி அமர்த்தும் அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு Pfizer ltd., Mumbai, Cipla ltd., Mumbai, Ranboxy Laboratories, New delhi, apollo Hospital, chennai, Orchid pharma, chennai, biocon ltd., bangalore, Vasan Health care, trichy போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, வளாக நேர்முகத் தேர்வில் பங்கு பெறச் செய்து உயர் பதவியில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். மேலும் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் gate, gre, tofel, போன்ற திறனாய்வுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சுயதொழில், சுயவேலை வாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கும் எண்ணத்துடன் சுயதொழில் முனைவோர் மேம்பாட்டு மையமானது (emd cell) 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக் கப்பட்டு, இதுவரை 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுயவேலை வாய்ப்புத் துறையில் சிறந்து விளங்குகின்றனர். இம்மையத்தின் மூலம் பிற கல்லூரி மாணவர்களும் பயனுறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமானது 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்கள், கண் சிகிச்சை முகாம்கள், இரத்த தான முகாம்கள், சொட்டு மருந்து முகாம்கள், மரக்கன்றுகள் நடுதல், சுனாமி பாதித்த பகுதிகளில் உதவுதல் போன்ற மக்களுக்கான தொண்டுப் பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றது.

மேலும் மாணவ, மாணவியர்களின் வசதிக்காக தனித் தனியாகப் பசுமை நிறைந்த சூழல், தூய்மையான இருப்பிடம், சுகாதாரமான உணவு, குடிநீர் மற்றும் உடற்பயிற்சியகத்துடன் கொண்ட விடுதியானது, ஆதரவும், அரவணைப்பு எண்ணமும் கொண்ட விடுதிக் காப்பாளர் மேற்பார்வையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது.

மேலும் வளாகத்தினுள்ளேயே சிற்றுண்டியகம், வங்கி மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனையானது மாணவர்களும், ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் கடந்த 21 ஆண்டுகளாக இலவச மருத்துவச் சேவையைச் செய்து வருகின்றது.

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து, செம்மைப் படுத்த மாணவர்கள் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டு பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகின்றது.

ஒழுக்கமான கல்வி உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதை மனதில் நிறுத்தி, எமது நிறுவனமானது இக்கல்லூரி மாணவர்களை ஒழுக்க நெறி முறையில் வழிநடத்தி வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகுக்கின்றது. பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியானது சமுதாய நோக்குடைய மனிதநேயமுள்ள, தன்னம்பிக்கையுடைய, திறமையான, நோயாளிகளின் நலனில் அக்கறை கொண்ட மருந்தாளுநர்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.

இச்சிறப்பு வாய்ந்த பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியைத் துவக்கி 25 ஆண்டுகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெறுவதற்கும், எங்கள் செயல்பாடுகளை ஊக்குவித்து ஆக்கபூர்வமான பாதையில் எங்களை உருவாக்கி வழி நடத்திச் செல்பவரும், எங்கள் நிறுவனத் தலைவர் வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மேலும் பல சாதனைகளைப் படைத்து உலகத்தரத்திற்கு இணையாக தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான கல்லூரியாக (centre of excellence) உருவாக்குவோம் என்பதை இந்நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்