ஆன்மீகம் அழியாதது - கடவுளுக்குச் சம்பந்தப்பட்டது என்றால், அதன்பேரில் இதழ்களை ஏராளமாக நடத்துவது ஏன்?

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி : தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்று எல்.கே. அத்வானி கூறியுள்ளதுபற்றி..

-தி. அருணா, ஏலகிரி

பதில் : அடேடே அத்வானிஜி எப்போது இதைக் கண்டு பிடித்தார்? நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர் வாக்குகளை வாங்குவதற்கு இப்படி ஒரு தந்திரப் பேச்சா?

கேள்வி : தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரிமிலேயர் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கிறாரே?

-ம. செங்கமலம். எலந்தங்குடி

பதில் : ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்கு அவரது பங்களிப்பு இதுதானா? வேதனை, வேதனை! பொருளாதார அடிப்படை கூடாது என்பது அரசியல் சட்டப்படி உள்ள நிலை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்கூட. அப்படி இருந்தும் அவரே இப்படி சட்ட விரோதமாகப் பேசலாமா?

கேள்வி: ஈழத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைபோல, வெளி நாடுகளில் சீக்கியர்களுக்கும், வங்காளிகளுக்கும் நடந்திருந்தால் இந்தியாவின் நிலை என்ன?

-து. ஜவகர், குடியேற்றம்

பதில் : இந்தியாவில் மக்கள் சுனாமி ஏற்பட்டு பாதிக்கப்பட்ட இனம் தமிழினம்தானே! நாதி ஏது? ஒற்றுமை எதுவுமில்லாத இனம்தான் இது!

கேள்வி : யாகத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மக்களிடம் ஏன் ஓட்டு கேட்கவேண்டும்?

-நா. சஞ்சீவி, கடகம்

பதில் : ஆம் நல்ல கேள்வி. இங்குள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சிங்கள ரணில் விக்ரமசிங்கேகூட இங்கே வந்து கோயில்களில் யாகம் செய்து அங்கே அடுத்து வரும் தேர்தலில் ஜெயிக்க விரும்புகிறார்!

கேள்வி : தேசியம் - இன்றைய நிலை என்ன?

-நல். சக்கரபாணி, குலசேகரப்பட்டினம்

பதில் : தேசியம் - தேய்ந்த ஈயம் என்பதை மகாராஷ்டிரம், காஷ்மீர் வடகிழக்கு, தெற்கே கர்நாடகம், கேரளம் வரை பல மாநிலங்கள் காட்டி வருகின்றன.

கேள்வி : ரஜினியை அத்வானி சந்தித்ததன் பின்னணி என்னவாக இருக்கும்?

-கு. சந்திரசேகரன், விஷ்ணுபுரம்

பதில் : யாரும் அருகே போக அஞ்சும் அநாதையான பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் டெபாசிட்டாவது கிடைக்க அவர் ஒரு வேளை உதவுவாரோ என்ற நப்பாசையால் இருக்கலாம்!

கேள்வி: ஆன்மீகம் அழியாதது - கடவுளுக்குச் சம்பந்தப்பட்டது என்றால், அதன்பேரில் இதழ்களை ஏராளமாக நடத்துவது ஏன்?

-சா. சாவித்திரி சுப்பையன், புதுக்கோட்டை

பதில் : மக்களின் மூடத்தனத்தை மூலதனமாக்கி வருவாயைப் பெருக்க இப்படி ஒரு வழி - வழிப்பறிபோல!

கேள்வி: ஆண்கள் அடித்தால் பெண்கள் திருப்பி அடிக்கலாம் என்று மகளிர் ஆணையத் தலைவர் இராமாத்தாள் அம்மையார் கூறியுள்ள கருத்து சரியா?

-அரு. செல்வமகள், திருப்பதி

பதில் : நூற்றுக்கு நூறு சரி. அம்மையாரின் துணிச்சலான கருத்துக்காக நம் வாழ்த்துகள்.

கேள்வி: ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசு என்ற முறையில் தி.மு.க. அரசு மேற்கொண்ட முயற்சிகள்போல் வேறு எந்த அரசாவது செய்ததுண்டா?

-வேல் தமிழ்மலை. மதுராந்தகம்

பதில் : ஒரு மாநில அரசு இதைவிட அதிகமாக, அடுக்கடுக்காக, வேறு எந்த மாநிலத்திலும் நடைபெறாது என்பதே நடுநிலையாளர் கள் கருத்து.

கேள்வி: நார்வே நாட்டு சமாதானப் பேச்சை தன்னிச்சையாக முறித்துக் கொண்டது இலங்கை அரசுதானே? பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்கக் கோரும் இந்திய அரசுக்கு இது தெரியாதா?

-இ.நா. இராமண்ணா, சீர்காழி

பதில் : நன்றாகவே தெரியும். இராணுவ நடவடிக்கை தீர்வாகாது; அதை நிறுத்தி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று கூறுகிற இந்திய அரசு - அது என்ன எப்படி எதைச் செய்வது என்று உலகத்திற்குக் காட்ட முன்வர வேண்டாமா?

1987-ல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தைக்கூட நடைமுறைப்படுத்த இராஜபக்சே அரசு தயாரில்லையே! அதற்கு மாறாக அல்லவா நடக்கிறார்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்

பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி ;கல்லூரி வளாகத்தில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் சுமார் 200 வகையான மூலிகைச் செடிகளை உடைய மூலிகைப் பண்ணை