ராஜபச்சே பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டாராமே? ஆசிரியர் வீரமணி விடையளிக்கிறார்

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: மகாராட்டிர மாநிலம் - மாலேகான் மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் புரோகித் என்பவர் (ஓய்வு) இந்தியத் தரைப்படை லெப்டினென்ட் கர்னலாமே?

- சா. குணசேகர், விருகம்பாக்கம்

பதில்: பார்ப்பனர்களின் சதித் திட்டம் ஓய்வு பெற்றபின்பும் அவாள் நலனுக்கு, இந்துத்வா தீவிரவாதத்திற்கு, எப்படியெல்லாம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்பதற்கு - பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றது இது! புரிந்து கொள்ளட்டும் நாடும் ஏடும்!

கேள்வி: 2 பஜ்ரங்தள், வி.எச்.பி. அமைப்புகளைத் தடை செய்ய எந்தவித முகாந்திரங்களும் இல்லை என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறுகிறாரே?

- வாசு. வச்சலா, மேலக்காவேரி

பதில்: பலே! பல! இப்படித்தான் இந்துத்துவாவை உள்ளிருந்தே வளர்க்க வேண்டும். கட்டுச் சோற்று மூட்டைக்குள்ளே பெருச்சாளிகள்!

கேள்வி: கொழும்பில் அய்.நா. கிளை அலுவலகம் ஒன்றை அமைப்பதற்குக் கூட அனுமதிக்காத நிலையில், இலங்கை அரசு பற்றி அய்.நா. சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டாமா?

- கு. சேகரன், காஞ்சிபுரம்

பதில்: உலகப் பார்வை அதன்மீது விழக் கூடாது என்பதில் சிங்களப் பேரினவாதம் அவ்வளவு குறியாய் உள்ளது!

கேள்வி: ராஜபச்சே பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டாராமே?

- காழி. துரைசாமி, சென்னை-12

பதில்: ஆம்; விடுதலைப்புலிகளை ஒடுக்கி விட்டதற்கு அருமை யான ஆதாரத்தைக் காட்டவே அவர் பதுங்கு குழி நோக்கினார் போலும்!

கேள்வி: காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், வாஸ்து சரியில்லை என்று ஒரு பகுதி இடித்துக் கட்டப்படுகிறதாமே?

- காஞ்சி தி. இரமணன், சென்னை-81

பதில்: அதுபற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே அறிக்கை, பேட்டி, எதிர்ப் பேட்டிகள் எல்லாம் வந்துள்ளனவே! வாழ்க தேசியம்!

கேள்வி: முதல் அமைச்சர் கலைஞரை பதவி விலகக்கோரி தந்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளாரே செல்வி ஜெயலலிதா?

- நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை இது! ஈழத் தமிழர்களைக் காப்பாற்றிட இவரின் பங்களிப்பு இதுவரை என்னவென்று விளக்கினாரா?

கேள்வி: அமெரிக்க அதிபர் மாறினாலும், அந்நாட்டின் கொள்கை மாறாது என்கிறார்களே?

- த. வீரசிவாஜி, ஓலக்கோடு

பதில்: பொறுத்திருந்து பார்க்கும் உலகம்! அடிப்படை மாறுமோ மாறாதோ, அணுகுமுறை நிச்சயம் மாறவே செய்யும்!

கேள்வி: சூரபத்மனை முருகன் இரு கூறாகப் பிளந்து ஒன்றை மயிலாவும் (ஆசனம்) இன்னொன்றை சேவலாகவும் (கொடி) வைத்துக் கொண்டார் என்கிறார்களே?

- நா. சிவனேசன், தருமபுரம் (மயிலாடுதுறை)

பதில்: பைத்தியம் பிடித்தவனுக்கு கள் ஊற்றிய கதைகள் பற்றியா ஆராய்ச்சி? அய்யகோ! அறிவுக்கும் அக்கதைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!

கேள்வி: பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக்குரிய குற்றம் சரிப்பட்டு வருமா?

- ஆர்.கே. ராசன், ஆடுதுறை

பதில்: நியாயம் தானே; சரிப்பட்டுத் தான் வர வேண்டும். நல்லவைகளைப் பாராட்டி வரவேற்க வேண்டும் நாம்!

கேள்வி: அழகு சாதனப் பொருள்களைத் தடை செய்தால் எவ் வளவோ பொருளாதாரம் மிச்சப்படாதா?

- தி.மாலதி, காரைக்கால்

பதில்: பெண்கள் வாக்கு வங்கியை தேர்தலில் நிற்போர் யோசிக்க மாட்டார்களா? எனவே இது போன்றவைகளை அவர்கள் ஆதரிக்க மாட்டார்களே! முதலில் அழகுப் போட்டியை தடை செய்ய முடியுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்