உலகப் பகுத்தறிவாளர் சுன் ஸ்டூவர்ட் மில்19ஆம் நூற்றாண்டின் சுதந்திரச் சிந்தனையாளர்.

மிகச் சிறந்த பகுத்தறிவாளர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் ஞானத் தந்தை (God Father) ஜான் ஸ்டூவர்ட் மில், பிரிட்டனின் தத்துவ மேதை; 19ஆம் நூற்றாண்டின் சுதந்திரச் சிந்தனையாளர். கடவுள் நம்பிக்கையைத் திணித்து மதத்தில் மாட்டி வதைத்து, மத நூல்களில் எழுதப்பட்டிருக்கும் பொய்களை நம்புமாறும் கடைப்பிடிக்குமாறும் கட்டாயப்படுத்தப்பட்ட காலத்தில், கடவுள் என்ற கட்டறுத்து, மத ஓடத்தில் ஏற மறுத்துச் சுதந்திரமாகச் சிந்தித்துத் தம் அறிவுவழிப் பயணம் செய்வோர் சுதந்திரச் சிந்தனையாளர்கள் என்று அழைக்கப் பட்டனர்; அறியப்பட்டனர். அவர்கள் தாம் இன்றைக்குப் பகுத்தறிவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

19ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஜான் ஸ்டூவர்ட் மில். இந்தியாவில் இருப்பதை நாடாளுமன்றம் என்கிறோம். இன்றைய பிரிட்டனில் இருப்பதையும் நாடாளுமன்றம் என்றுதான் கூறுகிறோம். ஆனால் அன்றைய பிரிட்டன் நாட்டில் இருந்த பார்லிமெண்ட்டைப் பாராளுமன்றம் என்றுதான் பொருத்தமாக அழைத்தனர். பிரிட்டன் நாடு உலகின் மிகப் பெரிய காலனிகளைக் கொண்டிருந்த பேரரசாக விளங்கியதல்லவா? சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்றுதானே அழைத்தார்கள்! ஒரு நாட்டில் சூரியன் எழுகிறதென்றால் அந்நாடும் பிரிட்டனில் அடங்கியதாக இருக்கும். நாள் கழிந்து சூரியன் ஒரு நாட்டில் மறைகிற நேரத்தில் எதிர்த் திசையில் ஒரு நாட்டில் சூரியன் எழும் நேரமாக இருக்கும். அந்த நாடும் பிரிட்டன் பேரரசைச் சேர்ந்ததாக இருக்கும். அதனால் அந்தப் பெருமை தரும் பெயர் பிரிட்டன் பேரரசுக்கு இருந்தது. அந்த வகையில் பார் முழுவதும் ஆண்ட நாட்டின் நாடாளுமன்றம், பாராளுமன்றம் என்று அழைக்கப்பட்டது.

அவ்வளவு பேரும் பெருமையும் புகழும் இருந்தென்ன? மனித குலத்தின் சரிபாதியான பெண்கள் வாக்குரிமை அளிக்கப்படாத மனிதப் பொருள்களாகத் தான் இருந்தனர். அதனைக் கண்டித்துக் குரல் எழுப்பிய சுதந்திரச் சிந்தனையாளர், மில்.

சமூகத்தின் அங்கமான மக்களை விற்று, அடிமைத் தன்மைக்குத் தங்களை ஆளாக்கிக் கொள்ளக் கூடாது என்று பேசியவர் மில், உன்னை விற்காதே என்று நம் புரட்சிக் கவிஞர் பாடியதை இந்த நேரத்தில் நினைவு கொள்ளலாம்.

அத்தகைய சிறப்புக்குரிய சிந்தனையாளர் ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) 20.5.1806இல் லண்டனுக்கருகில் உள்ள பென்டன்விலி (Pentonville) எனும் ஊரில் பிறந்தார். அவரின் தந்தை ஜேம்ஸ் மில் என்பாரும் ஸ்காட்லாந்து பகுதியின் தத்துவ மேதையாவார்.

தன் மகனுக்குத் தாமே கல்வி கற்பித்தார். அவரின் நண்பர்கள் ஜெரமி பென்தாம் மற்றும் ஃபிரான்சிஸ் பிளேஸ் ஆகியோரும் ஸ்டூவர்ட் மில்லுக்குப் பாடங்கள் நடத்தினர். நல்ல, சிறந்த மனிதனாக அவரை உருவாக்க வேண்டும் என்கிற அவாவில், யாருடனும் சேர்ந்து பழகவிடாமல் தம் குழந்தைகளுடன் மட்டுமே விளையாடி வருமாறு பார்த்துக் கொண்டார். பென்தாமின் நண்பரும் அவரைப் பின்பற்றுபவருமாகிய ஜேம்ஸ் மில், கூட்டு வாழ்க்கைக் கொள்கையுடையவர். தன் மகனைச் சிறந்த அறிவுள்ளவனாகவும் சமூகத்திற்குப் பயன்படுபவனாகவும் வளர்த்து தனக்கும் தன் நண்பர் பென்தாமுக்கும் பிறகும் சிறந்து விளங்க வேண்டும் என்கிற பெரு விருப்புடன் அவரை வளர்த்தார்.

ஸ்டூவர்ட் மில்லும் கருவிலே திருவுடைய குழந்தையாக இருந்தார். இளவயதிலேயே துருதுருப்புடன் எதையும் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார். மூன்று வயதில் அவருக்கு கிரேக்க மொழி கற்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எட்டு வயதில் ஈசாப் கதைகள், சாக்ரடீசின் கருத்துகள், பிளேட்டோவின் ஆறு உரை-யாடல்-கள், லூசியன், டயோஜெனிஸ், லாரிடஸ், போன்ற பழைய தத்துவ அறிஞர்-களின் கருத்துகளையெல்லாம் கற்றுத் தேர்ந்-தார். இங்கிலீசில் முழு வரலாற்றையும் படித்து, கணிதமும் கற்றார்.

அந்த எட்டு வயதில் லத்தீன் மொழியையும் அல்ஜீப்ரா கணக்கையும் கற்றுக் கொண்டார். தம் குடும்பத்துச் சிறுபிள்ளைகளுக்கு, இவரை விடச் சிறுவர், சிறுமிகளுக்கு ஆசிரியராகவே விளங்கினார். பத்து வயதில் பிளேட்டோ, டெமாஸ்தனிஸ் ஆகியோரின் கருத்துகளைப் படித்துப் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ள-வராக விளங்கினார். கவிதை எழுதவும் அவர் பயில வேண்டும் என அவரின் தந்தை விரும்-பினார். அப்படி அவர் எழுதத் தொடங்கிய செய்யுள்கள் இலியத் காவியத்தின் தொடர்ச்-சியாக அமைந்தன. ஓய்வு நேரங்களில், மனதும் அறிவும் இளைப்பாறும் வகையில் ராபின்-சன்குருசோ, டான் க்விஸோட் முதலிய பொழுபோக்குக் கதைகளையும் படித்துக் கொண்டிருப்பார்.

அவருக்குப் பன்னிரண்டு வயது ஆகும்-போது அவர் தந்தை எழுதிய இந்திய வரலாறு என்ற நூல் வெளியிடப்பட்டது. அப்போது ஸ்டூவர்ட் மில், தருக்கவியல் கற்கத் தொடங்கி அரிஸ்டாட்டிலின் தருக்க முறை-களை அம்மொழியிலேயே படித்துத் தேர்ந்தார். பின் அரசியல் பொருளாதாரம் படித்தார். ஆடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிகார்டோ எழுதிய நூல்களைத் தம் தந்தையின் மூலம் கற்றார்.

பள்ளிக்குப் போகாமல், கல்லூரிக்குச் செல்லாமல் ஸ்டூவர்ட் மில் கற்றதன் விவரங்-களை வெளிப்படுத்தக் காரணமே, அத்தகைய கல்வி எத்தகைய சிறப்புடன் எத்தகு நோக்-கத்துடன் அளிக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்வதற்கே!

ஒரு சிந்தனையாளனை உருவாக்கிடவே அக்கல்வி அளிக்கப்பட்டது; என் தந்தையைப் போன்ற சீரிய சிந்தனையாளரால் மிகத் தீவிரமாகக் கற்பிக்கப்பட்டது. நான் தவறு-கின்ற வேளைகளிலும் அவர் வைக்கும் தேர்வுகளில் நிறைவாக இல்லாத நேரங்-களிலும் என் தந்தை கோபப்பட்டாலும், அவர் கற்பித்த முறைதான் மிகவும் அறிவியல் பூர்வமாக அமைந்திருந்தது. அவர் தெரிவித்த கருத்துகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டாலும், அவர் கருத்துக்கு மாற்றாகவும் சிந்திக்கத் தொடங்கினேன் சில காலம் கழித்து என் தந்தையையும் என் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்தேன். அது அவரின் அறிவாற்-றலை வெளிப்படுத்துகிறதே தவிர என்னால் ஆனது ஒன்றுமில்லை என்று ஸ்டூவர்ட் மில் கூறினார் என்றால் அவர் பெற்ற கல்வியும் அதன்மூலம் வரப்பெற்ற அறிவும் தம் தந்தைக்கு மாறாகச் சிந்தித்துத் தம் வழிக்கு ஆசிரியரான தம் தந்தையையே கொணர்ந்த வகையில் அக்கல்வி அமைந்ததையும் உணரலாம்.

14 வயதில் ஜெர்மி பென்தாமின் சகோதரர் சர்.சாமுவேல் பென்தாமுடன் ஃபிரான்சு நாட்டில் ஓராண்டுக்காலம் தங்கியிருந்தார். அந்நாட்டின் இயற்கை எழிலை அவர் மிகவும் விரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்பொழுதுகூட வேதியியல், விலங்கியல், மேல்நிலைக் கணிதம் போன்றவற்றை ஒரு பேராசிரியரிடம் கற்றார். எல்லாப் பொரு-ளையும் கற்றார். எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் கற்றார். விளைவு...

நரம்புக் கோளாறு அவரது 20ஆம் வயதில் ஏற்பட்டது. ஓடி ஆடி விளையாடித் திரிய வேண்டிய இளம் வயதிலேயே கற்கத் தொடங்கியதால் மன அழுத்தம் ஏற்பட்டு காலப் போக்கில் வளர்ந்து தொல்லை தரத் தொடங்கியது. அத்தொல்லையைப் போக்கிட அவர் மீண்டும் படிப்பை நாடினார். இம்முறை வேறுபட்ட படிப்பு. வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் எனும் இங்கிலீசின் அழகியல் கவிஞரின் கவிதைகளைப் படித்தார். நம் புரட்சிக் கவிஞரின் அழகின் சிரிப்பு போன்ற அழகியல் எழில் முழுவதும் துலங்கும் அற்புதக் கவிதைகளை இங்கிலீசு மொழிக்கு வழங்கிய மாபெரும் கவிஞன். கவிதை மன இறுக்கத்-தைத் தளர்த்தியது. அவரின் ஆற்றல் மீண்டும் முகிழ்த்தது. அவரே கூறியது போல, மேக மூட்டம் கலைந்து போனது!

ஒரு பல்கலைக் கழகத்தில் கற்பிக்கப்படும் அனைத்துக் கலைகளையும் கற்ற இவர், அக்காலத்தேயும் சிறந்து விளங்கிய ஆக்ஸ்ஃ-போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் சேரவோ, படிக்கவோ விரும்பினாரில்லை; மறுத்து விட்டார். அங்கே பிறப்பிக்கப்படும் கிறித்துவக் கட்டளைகளை வெள்ளைப் பிசாசுகளிடம் இருந்து பெற்றிட அவர் விரும்ப-வில்லை. (வெள்ளை அங்கி அணிந்த கிறித்துவப் பாதிரிகளைப் பிசாசுகள் (White Devils) என்றும் அவர்களின் கற்பித்தலை, கட்டளை என்றும் வெறுத்த சுய சிந்தனை-யாளர் அல்லவா? ஜேம்ஸ் மில் தம் மகனுக்குப் பேராசிரியராக இருந்து பல கலைகளையும் கற்பித்தார் என்றாலும், அவரும் ஒரு காலத்தில் மாணாக்-கர் தானே! 1773இல் பிறந்த அவர் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதே நேரத்தில் கிறித்துவ மதப் போதகர்க்கான பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. பின்னர் கொஞ்ச காலம் கிறித்துவ வழிபாட்டு இடங்களில் பாதிரியாகப் பணி புரிந்தார். அப்பணி, அவருக்கும் சரிப்பட்டு வரவில்லை; மத நம்பிக்கையாளர்களுக்கும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக இல்லை. ஆம், அவர் ஒரு தோற்றுப்போன மதபோதகர்!

லண்டன் நகருக்கு ஜேம்ஸ் மில் இடம் பெயர்ந்தார். எழுதலாம், வாழ்க்கையை ஓட்டலாம் என நினைத்தார். வருமானத்திற்கு வழியில்லாமல், முழு நேர எழுத்தாளனாக வாழ்வது எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் சரிப்பட்டு வராதது. அவரும் அவர் குடும்பமும் பத்தாண்டுக்காலம் படாதபாடு பட்டது. இந்த லட்சணத்தில் ஜேம்ஸ் மில் இணையருக்கு 9 குழந்தைகள். ஒரு வழியாக இந்திய வரலாறு நூலை 12 ஆண்டுகள் உழைத்து எழுதி வெளியிட்ட பிறகுதான் வருமானம் வரத் தொடங்கியது. அதே காலகட்டத்தில் கிழக்-கிந்தியக் கம்பெனியில் வேலை கிடைத்தது, நல்ல சம்பளத்தில்!

குடும்பம் நல்ல நிலையில் ஓடத் தொடங்-கியது. அதுவரை அவரது குடும்பத்திற்கு ஆதரவாக அவரது நண்பர் ஜெரமி பென்தாம் பொருளாதார ரீதியில் உதவி வந்தார்.

ஜேம்ஸ் மில்லும் ஜெரமி பென்தாமும் இணைந்து தத்துவத் தீவிரவாதிகள் என்றொரு அமைப்புக்கு உதவியாக இருந்து அதன்மூலம் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசியலில் புதிய எழுச்சியை உண்டு பண்ணினார்கள். அரசியலிலும் நீதியிலும் சீர்திருத்தம் வேண்டினார்கள்; உலகம் முழுக்க எல்லா வயது நிறைந்த ஆண்களுக்கும் வாக்குரிமை கோரினார்கள்; பழைமையான இயற்கை நியதிப்படி மகிழ்ச்சி அடை-வதிலிருந்து மாறுபட்டு அரசியல் ரீதியான இன்பம் அடைதல் போன்ற கொள்கை-களுக்காகப் பாடுபட்டனர். இவையல்லாத வழிகளில் இன்பம் அடைகிறோம் என்பதை பென்தாம் பொய்க்கால் முட்டாள்தனம் (nonsense upon Stilts) என்றே கூறுவார்.

மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட சிந்தனை அவர்களுடையது; காரணம் அவர்களுடையது பகுத்தறிவுச் சிந்தனை. புதிய கட்டமைப்பு செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்-பியதே காரண காரிய அடிப்படையில் அமைந்த பகுத்தறிவு நெறிகளின் படியே! பயனடைதல் மூலம் மேம்பாடடைதல் எனும் கொள்கையை அவர்கள் தீவிரமாகக் கொண்டி-ருந்தனர்.

அவர்கள் இருவரும் கொண்டிருந்த கொள்கைகளின் சிறப்பையே புகழ்ந்து கூறுவதற்குக் காரணம், அவர்கள் இருவரும் தான் ஜான் ஸ்டூவர்ட் மில்லுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள், வழிகாட்டிகள் என்று அமைந்து உருவாக்கியதே! அவர்களின் கொள்கை வழிப்படியே வளர்த்தார்கள்; அவரும் வளர்ந்தார்.

இவர்களிடம் அடிப்படைக் கொள்கை-களைப் பற்றிக் கேட்டறிந்த ஸ்டூவர்ட் மில் தாமஸ் கார்லைல், அகஸ்ட காம்டே, ஜான் ரஸ்கின், ஹெர்பர்ட் ஸ்பென்சர் போன்ற அறிஞர் பெருமக்களின் படைப்புகளைப் படித்துத் தம் அறிவைப் பெருக்கிக் கொண்டார். இவர்களில் அகஸ்டகாம்டே சிறந்த சமூகவியல் அறிஞர். சமூகவியல் என்ற சொல்லை உருவாக்கியவர் இவரே! சமுதாய நிலைக்கு - உயர்வாக இருந்தாலும் தாழ்வாக இருந்தாலும் - அதற்குக் காரணிகள், சீர்திருத்து-வதற்கான வழிவகைகள் போன்றவற்றைச் சிந்தித்துத் தத்துவங்களை வடித்துக் கொடுத்தவர்.

ஜேம்ஸ் மில்லும் பென்தாமும் ஏடுகள் நடத்தித் தம் கொள்கைகளைப் பரப்பினர். அதனையொட்டி, ஸ்டூவர்ட்மில்லும் அவர்-களுடன் சேர்ந்து லண்டன் ரெவ்யூ எனும் ஏட்டினை நடத்தினார். இந்த ஏடும் ஏற்கெனவே நடத்தப்பட்டு வந்த வெஸ்ட் மினிஸ்டர் ரெவ்யூ எனும் ஏடும் சீர்திருத்தம் விரும்பும் அனைவராலும் விரும்பப்படும் ஏடுகளாகத் திகழ்ந்தன. பென்தாம் 1832இலும் ஜேம்ஸ் மில் 1836இலும் மறைந்து விட்டனர்.

அதன்பின் ஸ்டூவர்ட் மில்லுக்குத் தாராள-மான கருத்துச் சுதந்திரம் கிடைத்தது. கோல்ரிட்ஜ், தாமஸ் கார்லைல் போன்றோரின் கருத்துகளை உள்ளடக்கிய வீரியத் தத்துவங்-களை ஏடுகளின் மூலம் விதைக்கத் தொடங்கினார்.

கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியில் அமர்ந்து தம் தந்தையின் கீழ் பணிபுரிந்த அவர், தந்தை ஓய்வுக்குப் பிறகு அவருடைய இடத்திலேயே பணி உயர்வு பெற்றுப் பணி-புரிந்தார். 1826 முதல் 1857 வரை கிழக்கிந்தியக் கம்பெனிப் பணி இவரின் வாழ்க்கைக்கு உதவியதோடு அக்கம்பெனி இந்தியாவில் எப்படிப்பட்ட குறிக்கோளுடன் செயல்பட-வேண்டும் என்பதை வகுத்துத் தரும் வாய்ப்-பாகவும் அமைந்தது.

1830இல் அவருடைய எதிர்கால மனை-வியைச் சந்திக்கும் வாய்ப்பு நேர்ந்தது. ஹாரியட் டெய்லர் எனும் அவர் ஸ்டூவர்ட் மில்லுக்கு நண்பராக, வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவரைத் தம் வாழ்க்கைத் துணை-வராக்கிக் கொள்ள ஜான் ஸ்டூவர்ட் மில் விரும்பினார். ஆனால் ஹாரியட் டெய்லரின் நிலை வேறு விதமாக அமைந்திருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்கு முன்... மனித சமத்துவப் போராட்ட முன்னோடிகள்

பிரபாகரன் என்ற பெயரை சொல்லக்கூடாதா? எனது நாக்கை வெட்டிக் கொள்வேனடா திரைப்பட இயக்குனர் பாரதிராஜா

செக்ஸ் படங்களையும் அனுமதிக்கலாம்!-கமல்